நிலக்கரி கொள்வனவு தொடர்பில்
விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழு என்றால், இந்த விசாரணை ஆணைக்குழு நீதிபதிகளின் சுயாதீன தன்மையை கேள்விக்குட்படுத்தி, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவை கைது செய்யவேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.கூட்டு எதிர்க்கட்சி செவ்வாய்க்கிழமை (12) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் 2019 முதல் 2026 ஏப்ரல் வரை நிலக்கரி கொள்வனவு தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கிறது. உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி என 3 நீதிபதிகளைக்கொண்ட ஆணைக்குழுவை நிறுவி ,இவர்களுக்கு 6மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம் நிலக்கரி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சியம் வழங்க வரும்வரை ஆணைக்குழு காத்திருப்பதாகவும் சம்பிக்க,, அஜித், மரிக்கார், சானக்க வருவதில்லையா? என குறிப்பிட்டு ஜனாதிபதியின் ஊடக பிரிவு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் வாக்குமூலம் வழங்க தயாராகவே இருக்கிறோம்.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், நிலக்கரி கொள்வனவு தொடர்பில் தற்போது ஜனாதிபதி விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆணைக்குழு 3மாதங்களில் விசாரணை அறிக்கையை வெளியிடும். அதன்போது எமது தரப்பினர் விடுதலையாகுவார்கள். கடந்த அரசாங்க காலத்தில் இருந்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் பிரதிநிதியே இல்லாத ரில்வின் சில்வா நிலக்கரி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் தீர்ப்பை தற்போது அறிவித்திருக்கிறார். அவரின் இந்த கூற்று குறித்த ஆணைக்குழுவின் சுயாதீன விசாரணைக்கு பாதிப்பு என்பதுடன் ஆணைக்குழுவின் நீதிபதிகளின் சுயாதீனத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் நாங்கள் அந்த ஆணைக்குழுவுக்கு சென்று வாக்குமூலம் வழங்கவதற்கு முன்னர், இந்த ஆணைக்குழுவை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட ரில்வின் சில்வாவை அழைத்து விசாரணை செய்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்.
அதேநேரம் கடந்த காலங்களில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி காலத்தில் விசாரணைகுழு அமைத்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. அதேபோன்று குற்றப்புலனாய்வு பிரிவும் விசாரணை மேற்கொண்டுள்ளது. பாராளுமன்ற கோப் குழுவும் விசாரணை நடத்தி அறிககை சமர்ப்பித்திருக்கிறது. அநுரகுமார ஜனாதிபியின் காலத்தில் கொண்டுவந்த நிலக்கரி தொடர்பில் மாத்திரமே விசாரணை மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. இது தொடர்பில் தேடிப்பார்க்காமலே தற்போது 2018 முதல் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழு அமைத்திருக்கிறது. இதனால் தற்போது தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவால், மின் உற்பத்தி குறைவடைந்து, எடுத்து வரும் மாதங்களில் நாட்டில் பாரிய மின்சார நெருக்கடி நிலை ஏற்படும் அபாயம் இருக்கிறது. அது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாமல் போகும்.
அத்துடன் மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு வீதம் குறைப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போதுவரை நூற்றுக்கு 54வீதம் மின் கட்டணத்தை அதிகரித்திருக்கிறது என்றார்.
