மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நுவரெலியா பிரதான நகர், ஹவாஎலிய, கந்தப்பளை, நானுஓயா, ரதல்ல, தலவாக்கலை போன்ற இடங்களில் தொடர்ந்து கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் நிறைந்த காலநிலை காணப்படுகின்றன.
மேலும் இன்று (13) புதன்கிழமை அதிகாலை முதல் மழையுடன் கூடிய அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், வாகனங்களுக்கு இடையிலான தூரத்தை அவதானிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பனிமூட்டத்தால் வீதிகளில் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வேகத்தைக் குறைத்து, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் செல்லுமாறு போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதில் அதிகமாக நுவரெலியா - பதுளை பிரதான வீதி , நுவரெலியா - அட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா - கண்டி பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளமையால் சாரதிகள் மிகவும் அவதாரத்துடன் செயல்பட வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால், ஏற்கெனவே மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட நுவரெலியா - அட்டன் ,நுவரெலியா - கண்டி, நுவரெலியா- பதுளை பிரதான வீதிகளில் சீரமைப்புப் பணிகள் தொய்வடைந்து உள்ளன எனவே குறித்த வீதிகளில் பாதுகாக்க பயணிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது காணப்படும் மாறுபட்ட இந்தக் காலநிலையின் காரணமாக கடுமையான குளிரும் நிலவி வருகிறது.
