(நானுஓயா செய்தியாளர்)
நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை (23) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபனி காணப்பட்டது. குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வீதிகளில் பனி சூழ்ந்தது.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் நுவரெலியா பிரதான நகரில் மிதமான மழை அவ்வப்போது பெய்ததை அவதானிக்க முடிந்தது.
இதில் நுவரெலியா நகருக்கு உள்நுழையக்கூடிய பிரதான வீதிகள் அனைத்திலுமே கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு அங்குள்ள வீதிகள் புகைமண்டலம் போல் காட்சியளித்தது.
இதில் நுவரெலியா - கண்டி மற்றும் நுவரெலியா - ஹட்டன் போன்ற வீதிகள் அதிகப்படியான பனி காணப்பட்டது.
இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்துடன் சேர்ந்து கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.
