Our Feeds


Tuesday, June 30, 2026

Zameera

தெங்கு ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரிப்பு


 இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் இலங்கையின் தெங்கு ஏற்றுமதி வருமானம் 514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 


2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீத வளர்ச்சியாகும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 


மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள், கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதிச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த வளர்ச்சியை எட்டியிருப்பது சிறப்பம்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


தேங்காய் விளைச்சல் அதிகரித்தமை மற்றும் ஏற்றுமதிக்கான தேவைப்பாடு உயர்ந்தமை ஆகியன இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை கூறுகிறது. 


இருப்பினும், நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக செவ்விளநீர் ஏற்றுமதி சுமார் 33 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கையின் செவ்விளநீர் ஏற்றுமதியில் சுமார் 95 சதவீதம் டுபாய் சந்தைக்கே மேற்கொள்ளப்படுவதனால் இந்த நிலைமை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஏனைய தேங்காய் சார்ந்த ஏற்றுமதித் துறைகளில் வளர்ச்சி காணப்படுவதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 


தேங்காய் பருப்பு சார்ந்த தயாரிப்புகள், தேங்காய் நார்க் கைத்தொழில் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சிரட்டை சார்ந்த தயாரிப்புகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இந்த ஏற்றுமதி வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »