Our Feeds


Saturday, June 20, 2026

Zameera

வட மாகாணத்தில் 70.1 சதவீதமானோர் உயர்தரத்திற்குத் தகுதி

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன.

இதற்கமைய, வடக்கு மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

இம்முறை வெளியான பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'ஏ' (A) சித்தியைப் பெற்றுள்ளனர்.

அத்துடன், அகில இலங்கை ரீதியிலான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில், இம்முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 8ஆம் இடத்தைப் பெற்று முன்னேற்றமடைந்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணம் 69.87 சதவீதத் தேர்ச்சியுடன் தேசிய மட்டத்தில் 9ஆம் இடத்தைப் பெற்றிருந்தது. 

கடந்த ஆண்டுத் தரவுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை மாணவர்களின் உயர்தரத்திற்கான தேர்ச்சி வீதத்திலும், தேசிய மட்டத் தரவரிசையிலும் வடக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எனினும், இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 627 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.

-யாழ். நிருபர் கஜிந்தன்-


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »