தம்மை பணிநீக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, பாராளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் சபாநாயகர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்றைய தினம் (19) தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த மனு தொடர்பான காரணங்களை உறுதிப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளை, குறித்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள சபாநாயகர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணக-ஈஸ்வரன் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த மனுவைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துத் தாம் நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைப்பதாகத் தெரிவித்தார்.
