இலங்கையில் நிலுவையில் உள்ள மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவது சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல்கள் இத்தனை காலம் தாமதமாகியிருப்பதற்கு நாடாளுமன்றம் மற்றும் நாட்டை ஆட்சி செய்த, ஆட்சி செய்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளுமே கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு இதில் பெரும்பங்கு உண்டு.
தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பதைத் தீர்மானிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால், பழைய முறையிலா அல்லது புதிய முறையிலா தேர்தலை நடத்துவது என்பது குறித்து அவர்களால் தீர்மானிக்க முடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இது தொடர்பான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பி, அதன் அனுமதியைப் பெற்று தேர்தலை நடத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பல வருடங்களாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி, ஆளுநர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் மட்டுமே இயங்கி வருகின்றன.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாத அதிகாரிகளின் ஆட்சி ஒருபோதும் மக்கள் ஆட்சியாகாது, இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது.
ஒருவேளை கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்தத் தீர்மானித்தால், எல்லை நிர்ணய அறிக்கையை மறுசீரமைக்க புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை அமைத்து அந்தப் பணிகளை முடிக்கக் குறைந்தது 4 மாதங்களாவது தேவைப்படும்.
எனவே, இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த முடியாது.
திறைசேரியில் பணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, நிதி இல்லை என்றும் அந்தப் பணம் டிட்வா பாதிப்புகளை சீர்செய்ய செலவிடப்பட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார்.
பணத்தை அவ்வாறு டிட்வா செலவுகளுக்கு செலவிட்டதாகக் கூறுவது ஒரு சுவாரசியமான விடயம். நாங்கள் அரச சேவையில் இருந்த காலத்தில் அப்படி ஒரு விடயத்தைக் கேள்விப்பட்டதில்லை. இப்போது அப்படி ஏதும் முறை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
