தெல்தெனிய பகுதியில் அண்மையில் (17) காரொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள பல நிதி மோசடி வழக்குகள் தொடர்பிலும் தேடப்பட்டு வந்தவர் என ஸ்ரீலங்கா பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்
பல்லேகல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரும், அவரது 35 வயதுடைய மனைவியும் நேற்று அதிகாலை (24) யாழ்ப்பாணத்தில் வைத்து வாலாண மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜூன் 17ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் வாகனமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறியும், வாகனங்களை இறக்குமதி செய்து தருவதாகவும், வெளிநாட்டுப் பயணங்களை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி சந்தேகநபர் இதற்கு முன்னர் பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளில் பின்வருவன அடங்கும்:
கம்பஹா நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள 11.87 மில்லியன் ரூபா மோசடி மற்றும் மோட்டார் காரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமைக்கான வழக்கு.
அளுத்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள 1.72 மில்லியன் ரூபா மோசடி வழக்கு.
அளுத்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள 1.37 மில்லியன் ரூபா மோசடி வழக்கு.
திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வாகன இறக்குமதி தொடர்பான 2.2 மில்லியன் ரூபா மோசடி வழக்கு.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) அளுத்கடை, ஹொரண மற்றும் கடுவெல நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையிலுள்ள நான்கு தனித்தனி வழக்குகள்.
அளுத்கடை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வெளிநாட்டுப் பயண வாக்குறுதிகள் தொடர்பான 4.2 மில்லியன் ரூபா மோசடி வழக்கு.
தெல்தெனிய மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
