Our Feeds


Friday, June 5, 2026

Zameera

நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சஜித்


 (எம்.மனோசித்ரா)


நாடு தற்போது அனைத்துத் துறைகளிலும் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் 220 இலட்சம் மக்களைப் பற்றி சிந்தித்து நாட்டை மீட்பதற்கு மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,



பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வறுமையும் பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட மூன்று வேளை உணவைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும், நாடு இன்று பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது.


நாட்டின் இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, சில சுயநல மற்றும் அற்பவாத சக்திகள் இலங்கையின் இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடுவதற்கும், நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.


எனினும், ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் எமக்குள்ளே பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டைப் பாதுகாப்பதற்காக 220 இலட்சம் மக்களும் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் இணைந்து அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தயாராக உள்ளார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.


மேலும், எமது நாட்டில் பௌத்த சாசனத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையைப் பாதுகாத்து அதனை வலுப்படுத்துவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். ஏனைய மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பும் எமது உச்ச சட்டமான அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இனம், மதம், கலாச்சாரம் என எந்தவொரு வேறுபாடும் இன்றி அனைத்துத் தரப்பினரினதும் நல்லிணக்கத்துடனேயே இந்த வெசாக் ஊர்வலம் நடைபெறுகிறது. இத்தகைய நல்லிணக்கமும் சகோதரத்துவமுமே இலங்கையின் ஒற்றையாட்சி, இறையாண்மை  மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »