பிள்ளையான், சுரேஷ் சலே போன்றோர் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களை விடுதலை செய்கின்றபோது கொலை செய்திருக்கின்ற ஆதாரங்களை அழிப்பதற்கான சக்திகள் வெளியில் இருப்பதை உணரமுடிவதாக கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.பி.எம்.புஹாரி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நீதி கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வியாழக்கிழமை (18) கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அரசியல் வேண்டாம், பக்கச்சார்பு வேண்டாம், என்பதை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து,கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.பி.எம்.புஹாரி தொடர்ந்து தெரிவிக்கையில்,
உயிர்த்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாங்கள் ஆதரவாக நிற்கின்றோம். அரசின் நீதி வழங்கும் முயற்சிகளின் அர்ப்பணிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
அத்துடன், ஊழல் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களின் தலையீட்டை நாங்கள் எதிர்க்கின்றோம். அவர்களின் தலையீட்டால் நடைபெற்று வரும் விசாரணைகளை நிறுத்தி, தாமதமின்றி முன்னோக்கிச் செல்லுமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். விசாரணை செயல்முறையைத் திசைதிருப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
மேலும், தேவையான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சூத்திரதாரிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தும் வரை சுரேஷ் சலே மற்றும் பிள்ளையானைப் பாதுகாக்க வேண்டும். உயிர் பிழைத்தவர்களும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், முறையான சிகிச்சையும் ஆதரவும் இன்றி காயங்கள், மன அதிர்ச்சி மற்றும் உடல் ஊனங்களால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களை குணப்படுத்த அரசு வழிவகை செய்யவில்லை.
எனவே, விடுவிக்கப்பட்ட முஸ்லிம் கைதிகளுக்கு எதிரான தொடர்ச்சியான சித்திரவதை, அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், அவர்கள் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்யவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்நிலையில், அரசு விசாரணையை முடித்து, மேலும் தாமதமின்றி நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்து, இந்த முன்னாள் அரசு பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
