Our Feeds


Saturday, June 6, 2026

Zameera

காணி பிரச்சினை : மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது - துரைராசா ரவிகரன்


 யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து பங்களாக்களை அமைத்து உல்லாசமாக இருக்கும் நிலையில், காணிகளுக்குரிய மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது அந்த அந்த மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகள் இழைக்கப்பட்டால், அரசிற்கும் கொடுமையான நிலைகளே ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார். 

மயிலிட்டி மக்களால் தமது காணிவிடுவிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

கடந்த 1986ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கு, மயிலிட்டியில் வாழ்ந்த இந்த மக்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். 

இவ்வாறு தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. 

இந்நிலையில் அந்த மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை அரசானது எமது மக்களுக்கு செய்யும் கொடுமையிலும் கொடுமையான செயற்பாடாகவே இதனைக் காண்கின்றோம். 

கடந்த கால அரசாங்கங்கள் இந்த மக்களை மீள்குடியமர்துவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே தற்போதைய ஆட்சியாளர்களாவது தங்களை தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பதே இந்த மக்களின் கோரிக்கையாகவுள்ளது. 

அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற 'ஹிரிகம' என்னும் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றும்போது " நிலம் என்பது உங்களுடைய உரிமை, உங்களுடைய சொத்து, அதனை நீங்கள் பேணிப்பாதுகாக்க வேண்டும்" என கருத்துத் தெரிவித்திருந்ததை ஊடகங்களின் ஊடாகப் பார்வையிட்டிருந்தோம். 

ஜனாதிபதி குறிப்பிட்ட அதே விடயத்தைத்தான் நாமும் கோருகின்றோம். நிலம் என்பது எமது உரிமை, எமது சொத்து, எங்களுடைய நிலத்தை எமக்குத்தாருங்கள் என்பதைத்தான் எமது மக்களும் நாங்களும் கோருகின்றோம். 

இந்த மக்கள் ஏறத்தாள 3500 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்வீகக் காணிகளை இழந்துள்ளனர். எனவேதான் அந்தமக்கள் வீதி ஓரங்களில் நின்று தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். 

எனவே தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த மக்களின் பூர்வீக காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 

இந்தப் பகுதியில் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் ஒரு கொமாண்டோ பங்களா அமைக்கப்பட்டுள்ளது. 

எப்போதாவது இங்கு வந்து இராணுவத்தினர் தங்கிவிட்டுச் செல்வதற்காகவே அந்த பங்களா அமைக்கப்பட்டுள்ளதாக எம்மால் அறிய முடிகின்றது. 

அந்த கொமாண்டோ பங்களா அமைக்கப்பட்டுள்ள பகுதியில் 200இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகள் காணப்படுகின்றன. 

இவ்வாறு அந்த காணிகளுக்குரிய குடும்பங்கள் வீதிகளிலிருந்து தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்க, அந்த மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து அவற்றை அலங்கரித்து பங்களா அமைத்து இராணுவத்தினர் சுகபோகம் காண்கின்றனர். எனவேதான் நாம் எமது மக்களுக்கு கொடுமை இழைக்கப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டுகின்றோம். 

இதேபோன்ற கொடுமைகள் முல்லைத்தீவில் கேப்பாப்புலவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, வட்டுவாகல் உட்பட பல இடங்களில் இடம்பெறுகின்றது. மான்னாரில் முள்ளிக்குளத்திலும் இதேபோன்ற கொடுமைகள் இடம்பெறுகின்றது. 

அந்த மக்களும் தமது காணிகளை விடுவிப்பதற்கு தொடர்போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நாட்டில் தமிழ் மக்களாக நாம் பிறந்தது குற்றமா? தமிழ் மக்களை இவ்வாறாக வதைக்கவேண்டாம் என்றே நாம் கூறுகின்றோம். 

எமது மக்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகள் இழைக்கப்பட்டால், உங்களுக்கும் கொடுமையான நிலைகள் ஏற்படுமெனத் தெரிவித்துக்கொள்கின்றேன் - என குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »