(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
செம்மணி புதைகுழி விடயத்தில் நாங்கள் ஆரம்ப காலத்தில் இருந்து ஆழமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றோம். கடந்த காலங்களில் இவ்வாறு மனித எச்சங்கள் தென்படும் போது அவற்றை தெரியாமல் மூடி மறைக்கும் செயற்பாடுகளே நடந்தன. ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை. அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்குகின்றது.
இதற்கு காரணம் என்னவென்றால் நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் தமிழ் மக்களிடையே நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் இவ்வாறான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் எமது அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது.
இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் அவ்விடத்திற்கு செல்லவுள்ளார். இதன்படி செம்மனி தொடர்பில் ஆழமான கருத்தாடல்கள் நடத்தபப்படவுள்ளன. அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்குள்ள பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்குள்ள பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் நடக்கவுள்ளது என்றார்.
