Our Feeds


Friday, June 5, 2026

SHAHNI RAMEES

'டொனால்ட் ட்ரம்ப்' பெயர் சூட்டப்பட்ட மாடு! - பங்களாதேஷ் மிருகக்காட்சிசாலையில் வெடித்த சர்ச்சை!

 

அரிதான அல்பினோ வகை எருமை மாடு ஒன்றிற்கு, அமெரிக்க ஜனாதிபதி “டொனால்ட் ட்ரம்ப்” இன் பெயர் சூட்டப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, பங்களாதேஷ் தேசிய மிருகக்காட்சிசாலை அந்தப் பெயர் பலகையை அகற்றியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த வார இறுதியில் அந்த மிருகக்காட்சிசாலையின் கண்காணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், அவரது பணிநீக்கத்திற்கான உத்தியோகபூர்வ காரணத்தை அதிகாரிகள் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமுடியை ஒத்த தனித்துவமான பொன்னிற முடியைக் கொண்டிருப்பதால், இந்த எருமை மாட்டிற்கு “டொனால்ட் ட்ரம்ப்” என செல்லப்பெயர் சூட்டப்பட்டது.

இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த எருமை மாடு, ஆரம்பத்தில் ஈகைத் திருநாளின் (ஹஜ் பெருநாள்) குர்பானி வழிபாட்டிற்காக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

எனினும், அதன் தோற்றம் காரணமாக பண்ணைக்கு வருகை தந்த பெருமளவிலான மக்கள், தூரப் பிரதேசங்களில் இருந்தும் அதனைப் பார்வையிடத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, மக்கள் கூட்டம் அதிகரித்ததால் ஏற்பட்ட பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மைப் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு அந்த எருமை மாடு குர்பானி கொடுக்கப்படுவதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டு, டாக்காவிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமுடியைப் போன்றே இதன் தலைமுடி அமைப்பும் காணப்பட்டதால், அதற்கு அந்தப் பெயரைச் சூட்டியதாக எருமையின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

இந்த எருமை மாட்டைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முடிவும், அதனை மிருகக்காட்சிசாலைக்கு மாற்றியதும் பரவலான கவனத்தைப் பெற்றிருந்த போதிலும், ஒரு அரசியல் தலைவரின் பெயரை விலங்கிற்குச் சூட்டியமை சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே தற்போது அந்தப் பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »