Our Feeds


Tuesday, June 16, 2026

Zameera

மேன்முறையீட்டு நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ ஆஜர்!


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.


பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்ஷவினால் மறுஆய்வு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 


இந்த மனு இன்றைய தினம் (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.


அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


முன்னதாக இந்த மனு பரிசீலிக்கப்பட்ட போது யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் நீதிமன்றத்தில் சில விடயங்களை முன்வைத்திருந்தார்.


இந்த வழக்கில் எனது கட்சிக்காரருடன் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண்ணும் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்தார். எனினும், பின்னர் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண் சட்டமா அதிபரால் விடுவிக்கப்பட்டார். அவ்வாறானதொரு பின்னணியில், எனது கட்சிக்காரருக்கு எதிராக மாத்திரம் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது சட்டத்திற்கு முரணானது.



எனினும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் வாதாடுகையில், ஒரு பிரதிவாதிக்கு எதிராக இருந்தாலும் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என வலியுறுத்தினார்.


அதற்கமைய, இந்த சட்டப் பிரச்சினைத் தொடர்பாக இன்றைய தினம் முழுமையான விசாரணை நடத்தப்படும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »