Our Feeds


Friday, July 10, 2026

Zameera

60,448 கடல் அட்டைகளுடன் 26 பேர் கைது


 சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 60,448-க்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள் மற்றும் 12 டிங்கி படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

நேற்று (09) வடமத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா' நிறுவனத்தினால், மன்னார் சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியை உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான சில டிங்கி படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கரைக்குக் கடத்தப்பட்டுக் கொண்டிருந்த குறித்த கடல் அட்டைத் தொகுதி கடற்படையினரால் கண்டறியப்பட்டு, சட்டத்தின் கீழ் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இங்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 26 சந்தேக நபர்களும் 21 முதல் 64 வயதுக்கு இடைப்பட்ட, மன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், கடல் அட்டைத் தொகுதி மற்றும் 12 டிங்கி படகுகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீனவப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »