கட்டார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (16) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக மீண்டும் நாட்டை வந்தடைந்தார்.
கட்டாரின் தோஹாவில் அமைந்துள்ள லுஸைல் (Lusail) அரண்மனைக்குச் சென்ற பிரதமர், அந்நாட்டின் தற்போதைய அமீரான ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியைச் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து அல் வஜ்பா (Al Wajbah) அரண்மனைக்குச் சென்ற பிரதமர், கட்டார் அமீரின் தாயாரும் கட்டார் அறக்கட்டளையின் தலைவருமான ஷேய்க்கா மோசா பின்ட் நாசரிடமும் இலங்கை அரசாங்கத்தின் இரங்கலைத் தெரிவித்தார்.
இதுதவிர, மறைந்த முன்னாள் அமீரின் புதல்விகளான இளவரசி ஷேய்க்கா அல் மயாசா பின்ட் ஹமத் அல் தானி, இளவரசி ஷேய்க்கா ஹிந்த் பின்ட் ஹமத் அல் தானி மற்றும் அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களிடமும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கட்டார் நாட்டின் சமூக மேம்பாடு மற்றும் குடும்ப விவகாரங்கள் அமைச்சர் புதைனா பின்ட் அலி அல் ஜபர் அல் நுஜைமியும் கலந்துகொண்டிருந்ததுடன், அவரிடமும் இலங்கை சார்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது இரங்கலைத் தெரிவித்தார்.
