"டிஜிட்டல் மயமாக்கல்" மூலமாக அரச சேவைகளை மிகுந்த வினைத்திறனும், வெளிப்படைத்தன்மையும் மிக்க இலகுவான முறையில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தைப் பலப்படுத்துவதுடன், அரச நிறுவனங்களில் வங்கி அட்டைகள் (POS இயந்திரங்கள்) மூலம் பணம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு, வியாழக்கிழமை (2) திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.
இதற்கமைய, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள பதிவாளர் பிரிவு மற்றும் 4 ஆம் மாடியில் அமைந்துள்ள வாகன வருமான அனுமதிப்பத்திரப் பிரிவு ஆகியவற்றில் POS இயந்திரங்களை ஆரம்பித்து வைத்த பிரதமர், அடையாள நிமித்தமாக பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலின் கீழ், இலங்கை வங்கியின் (BOC) நிதி மற்றும் தொழில்நுட்ப அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக, மக்களிடமிருந்து கட்டணங்களை அறவிடும் சந்தர்ப்பங்களில் கிரெடிட் (Credit) மற்றும் டெபிட் (Debit) அட்டைகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பான முறையில் பணத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
