நமது நாட்டில் உள்ள சிறைச்சாலைச் சட்டங்களில் "அரசியல் கைதி" என்ற பதத்துக்கான முறையான விளக்கம் எங்கும் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நீதிமன்றங்களைப் பொறுத்தவரை எவரையும் "அரசியல் கைதி" என்று குறிப்பிட்டு யாரும் விளக்கமறியலிலோ அல்லது சிறைத்தண்டனையிலோ அடைக்கப்படுவதில்லை. அவர்கள் சந்தேக நபர்களாகவோ அல்லது குற்றவாளிகளாகவே நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள் என குறிப்பிட்டார்.
தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்கில் பிரசாரம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறினாரே, அந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் இன்னும் இருக்கிறதா என அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பான பட்டியலைத் தான் பலமுறை ஆராய்ந்ததாகத் தெரிவித்த அமைச்சர், இவர்கள் அனைவரும் நாட்டின் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டவர்கள் என்றும், பல பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் என்றும் விளக்கமளித்தார்.
கடந்த கால அரசியல் சூழல்களைக் கருத்திற்கொண்டு, சிறைச்சாலையில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்த அறிக்கையின்படி, கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைப்பது மற்றும் பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கையானது வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடு முழுவதற்கும் பொதுவானதாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
எது எவ்வாறாயினும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றுவதற்கு, அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Thursday, July 23, 2026
அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைச்சாலைகளில் இல்லை - நீதியமைச்சர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
