Our Feeds


Friday, July 3, 2026

Zameera

தமிழக முதலமைச்சருடன் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு


 இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், இன்று (03) சென்னையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். 


இச்சந்திப்பின் போது ஈழத்தமிழ் மக்களின் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூலமான கடிதம் ஒன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 


பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். 


இக்கலந்துரையாடலின் போது, ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள். 


இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு, தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம். 


ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியதன் தேவை. 


இந்திய – ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள். 


இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. 


இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகத் தமிழர் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான கே. வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ், உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ், கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 


அத்துடன் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசும் இந்த சந்திப்பில் இணைந்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »