ஊழல் அபாயங்களைக் குறைப்பதற்காக, பாரம்பரிய காகிதக் கோப்பு முறையை முற்றாக நிறுத்திவிட்டு, 'மத்தியப்படுத்தப்பட்ட மின்னணு சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடன முறைமையை' கட்டாயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
2026 ஜூன்/ஜூலை மாதங்களுடன் முடிவடைந்த சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய அனைத்து அரச ஊழியர்களுக்கு எதிராகவும், கடுமையான நிதி அபராதங்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்காக, ஆணைக்குழுவில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, உடனடியாகப் புதியவர்களை ஆட்சேர்ப்பு செய்யுமாறு அரசாங்கத்திற்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியின் 5 ஆவது மற்றும் 6 ஆவது மீளாய்வுகளுக்குப் பிறகு, அரசியல் களத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் மற்றும் உயர்மட்ட நிதிக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கான பொறுப்பு நேரடியாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2025-2029 காலப்பகுதிக்கான தேசிய ஊழல் எதிர்ப்புச் செயல்திட்டத்தின் கீழ், ஆணைக்குழுவின் அதிகாரங்கள் தனியார் துறையின் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் வரை விரிவுபடுத்தப்படுவதுடன், நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்களைக் கண்டறிந்து, பணமோசடியைத் தடுக்கும் FATF சர்வதேசத் தரநிலைகளுக்கு இலங்கையை உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.
