ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ‘இலங்கை பைத்துல்மால் நிதியம்' என்ற பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்தல் எனும் தனிநபர் பிரேரணை இறுதி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.ஆளும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவின்மை காரணமாகவே குறித்த தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வாபஸ் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த தனிநபர் பிரேரணையை கடந்த (10) வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, தன்னால் முன்மொழியப்படும் தனிநபர் பிரேரணையை வழிமொழியுமாறு ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுன்ற உறுப்பினர்களிடம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வேண்டுகோளை ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பாராளுன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததுடன் இந்த தனிநபர் பிரேணைக்கு எதிர்ப்பும் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்தே ‘இலங்கை பைத்துல்மால் நிதியம்' என்ற பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்தல் எனும் தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாபஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
