இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதுவரை மொத்தமாக 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாதத்தில் மட்டும் 21,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஜூலை மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும் 12,692 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண வாரியாகப் பார்க்கும்போது, மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 35,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு மாகாணத்தில் 10,657 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 5,756 பேரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களில் கண்டி மாவட்டத்தில் 5,560 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
