Our Feeds


Wednesday, August 12, 2026

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை 5 வருடங்களின் பின் நிறைவு!



உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில்

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.


அதற்கமைய நேற்று இரவு வரை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பான இறுதிச் சாட்சியங்கள் அரச தரப்பினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சுமார் 5 வருட காலப்பகுதியில் 245 முறை நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற வழக்கு தொடர்பான விசாரணை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.


மேற்படி வழக்கு நேற்று  மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில், நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் நீதிபதி இராமநாதன் கண்ணன் உள்ளிட்ட மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் 31 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், குறித்த வழக்குகளில் 5 வழக்குகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு 3 வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும் கடமையை அலட்சியப்படுத்தியமை உள்ளிட்ட 854 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவை நிரூபணமான முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோருக்கு மேல் நீதிமன்ற நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


அத்தோடு மாவனெல்லை பகுதியில் 7 புத்தர் சிலைகளும் ஒரு தெய்வத் திருவுருவச் சிலையும் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ மாகாண மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 11 பேருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த மூன்று வழக்குகளைத் தொடர்ந்து விசாரணைகள் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மேலும் 3 வழக்குகளுக்கான தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.



புத்தளம் லெக்டோஸ்வத்தை பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் மற்றும் வெடிமருந்து களஞ்சியசாலை ஒன்றை பராமரித்து வந்த விவகாரம் தொடர்பில் 6 சந்தேக நபர்களுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் 24 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு ஆகிய வழக்குகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.


மேலும் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திறம்பட விசாரணை செய்வதற்காக, குறித்த வழக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அரச தரப்பு சாட்சி விசாரணையின் போது, பிரதிவாதிகள் வழங்கிய பல வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்டவை என்பது உண்மை விளம்பல் விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், சஹரானின் தற்கொலைக்குண்டுதாரி குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அரச சாட்சியாக மாறியதன் மூலம் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜெயசுந்தர, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்கை நெறிப்படுத்தி வருகின்றனர்.


நிரந்தர மேல் நீதிமன்ற நிதிபதிகள் அமர்வு புதுக்கடை பழைய நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. அதற்கமைய கடந்த நாட்களில் இரவு 10.00 மணி வரை விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. ஆரம்பத்தில் மாதத்துக்கு ஒருமுறையும், பின்னர் வாரத்துக்கு 2-3 நாட்களும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட வழக்கு, கடந்த ஆண்டிலிருந்து நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றது. உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை சுமார் 245 நாட்கள் அரசுத் தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »