2011ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் தேதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளி (Video Link) ஊடாக சாட்சியமளிக்க வேண்டும் என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்தார். இந்த விசாரணையில் சாட்சியமளிக்குமாறு அவருக்கு முதன்முதலில் 2019 செப்டம்பர் 27ஆம் தேதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி மின்னணு ஒலி-ஒளி (Electronic Audiovisual) வசதியின் மூலம் சாட்சியமளிக்க அனுமதி கோரி அவர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில் கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர் என நீதிமன்ற பதிவுகள் குறிப்பிடுகின்றன.
அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை தொடர்வதற்காக, அந்த அச்சுறுத்தல் குறித்த தகவல்களை முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
