Our Feeds


Tuesday, August 25, 2026

Zameera

பயிர் இழப்பீட்டுக்காக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!


 நாட்டின் முக்கிய மாவட்டங்கள் சிலவற்றில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாகக் காப்பீட்டு நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 3,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


 


தற்போது நிலவும் எல் நினோ சூழ்நிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சியான வானிலை காரணமாக மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களுக்குக் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.


 


தற்போது வரை அறிக்கையிடப்பட்டுள்ள தரவுகளுக்கு அமைவாக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 7,000க்கும் அதிகமான விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.


 


இதில் நெற்செய்கைக்குப் பாதிப்பாக அனுராதபுரம் மாவட்டத்தில் 1,923 ஏக்கர்களும், மொனராகலையில் 1,401 ஏக்கர்களும், பொலன்னறுவையில் 1,259 ஏக்கர்களும், அம்பாறையில் 1,055 ஏக்கர்களும், அம்பாந்தோட்டையில் 783 ஏக்கர்களும் சேதமடைந்துள்ளன.


எவ்வாறாயினும், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்தச் சேதங்களை மதிப்பிடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.


 


இதற்காகக் விவசாய மற்றும் விவசாய பாதுகாப்பு சபையின் கள அதிகாரிகளும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களும் அடங்கிய குழுவினர், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்குச் சென்று பரிசீலனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 


இந்த நிவாரணத் திட்டத்தின் கீழ் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய 06 பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 100,000 ரூபா வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 05 ஏக்கர் வரை நட்டஈடு வழங் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 


இதுவரை பயிர்ச் சேதங்களை அறிவிக்காத விவசாயிகள் யாரேனும் இருப்பின், உடனடியாக விவசாய அபிவிருத்தி நிலையங்களில் பேணப்பட்டு வரும் சேத அறிவிப்புப் புத்தகத்தில் பதிவிடுமாறு அல்லது பிரதேச விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் அல்லது கள அதிகாரிகளைச் சந்தித்துத் தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 


மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாய மற்றும் விவசாய பாதுகாப்பு சபையின் 1918 என்ற குறுஞ்செய்தி/அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »