கேகாலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் தாமதமாக வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நீதியை வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ,
புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களின் கல்வி எதிர்காலத்திற்கு மிக முக்கியமானதொன்று என்பதால், இவ்வாறான தவறுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதி குறித்து அதிகாரிகள் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆசிரியர்களின் பொறுப்புகள் மற்றும் தற்போதைய வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்திற் கொண்டு, உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் போதுமான கொடுப்பனவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரியந்த பெர்னாண்டோ மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
