இசுருபாய கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களைக் காணாமல் போகச் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (15) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முதலாம் தரத்திற்கான 19,892 தமிழ் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடநூல்கள் இவ்வாறு உரிய விநியோக மையத்திடம் ஒப்படைக்கப்படாமல் இருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
பாடநூல்கள் ஒப்படைக்கப்படவில்லை எனப் பதிவான முறைப்பாடு:
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் கடமையாற்றும் உற்பத்தி மற்றும் விநியோக ஆணையாளர் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார்.
கிழக்கு மாகாணத்தில் முதலாம் தரத்தின் 03 ஆம் தவணைக்குரிய பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடநூல்களை விநியோகிப்பதற்காக பியகம பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து நிறுவனமொன்றுடன் கடந்த மே 04 ஆம் திகதி ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதன்படி அம்மாகாணத்தில் உள்ள 12 மையங்களுக்கு அவை உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணையின் முடிவு:
குறித்த முறைப்பாட்டின் பேரில் தலங்கம பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்த நிலையில், நேற்று (14) 05 சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான முதலாம் தரப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடநூல்கள் 19,892 ஐ மோசடி செய்தமை மற்றும் அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய காகிதக் கடைக்கு விற்கப்பட்ட பாடநூல்கள் பற்றிய அதிர்ச்சித் தகவல்:
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாடநூல் தொகுப்பைக் கொண்டு சென்ற போக்குவரத்து நிறுவனத்தின் லொறியின் சாரதி (முதலாவது சந்தேகநபர்), அலவ்வ, பாதயாய, மாவத்த பஹல, கெப்பிட்டிவலாஹேன பகுதியில் உள்ள பழைய இரும்பு மற்றும் காகிதம் வாங்கும் நபர் ஒருவரிடம் அனைத்துப் புத்தகங்கள் மற்றும் தாள்களைக் கிலோ ஒன்று 25.00 ரூபாவிற்கு விற்றுள்ளமை பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது.
அதன்படி, அந்தப் புத்தகங்களின் மொத்த எடை 1,700 கிலோகிராம் ஆக இருந்துள்ளதுடன், அவர் அந்தத் தொகுதியைக் கிலோ 25 ரூபா வீதம் வாங்கியுள்ளார்.
25 ரூபாவிற்கு வாங்கிய தொகுதியை 50 ரூபாவிற்கு விற்ற விதம்.
பழைய கழிவுப் பொருட்களை வாங்கிய இரண்டாவது சந்தேகநபர், 25 ரூபாவிற்கு வாங்கிய அந்தப் பாடநூல் தொகுதியைக் கிலோ ஒன்று 40 ரூபா வீதம் மீண்டும் விற்றுள்ளார்.
அவர், நாரம்மல பகுதியில் வசிக்கும் பழைய இரும்பு மற்றும் காகிதம் வாங்கும் நபருக்கு அதனை விற்றுள்ளார்.
பின்னர், நாரம்மலையைச் சேர்ந்த மூன்றாவது சந்தேகநபர், அந்தப் பாடநூல் தொகுதியைக் கிலோ ஒன்று 50 ரூபா வீதம் நிகவெரட்டிய பகுதியில் உள்ள ஒருவருக்கு மீண்டும் விற்பனை செய்துள்ளார்.
50 ரூபாவிற்கு வாங்கிய பாடநூல்கள் மீண்டும் வத்தளை பகுதிக்கு விற்பனை:
இவ்வாறு பாடநூல்களை வாங்கிய நான்காவது சந்தேகநபர், அந்தத் தொகுதியை வத்தளையிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வத்தளையிலுள்ள அந்த நிறுவனம் பழைய காகிதங்கள், கார்ட்போர்டுகளைச் சேகரித்து இயந்திரங்கள் மூலம் வெட்டிப் பண்டல்களாக மாற்றி இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனமாகும். இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முதலாவது சந்தேகநபரின் பழைய குற்றப் பின்னணி:
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தலங்கம பொலிஸார், கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபரான லொறி சாரதிக்கு எதிரான பல பழைய குற்றச்சாட்டுகளையும் வெளிக்கொண்டுவந்துள்ளனர்.
அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு தொம்பே பொலிஸாரால் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதே ஆண்டின் நவம்பர் 28 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலும், அதே ஆண்டின் டிசம்பர் 12 ஆம் திகதி கொடூர விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் தொம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் பாடநூல்களை உரிய விநியோக மையத்திடம் ஒப்படைக்கத் தவறியமை, குற்றவியல் மோசடி செய்தமை மற்றும் அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இன்று (15) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
