விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவது மற்றும் உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இடம்பெற்றது.
முறையான திட்டமிடலின்றி இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் முதலீடுகளும் உபகரணங்களும் வீணடிக்கப்படக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட திட்டத்தின் முன்னோடி கட்டத்தை விரிவாகத் திட்டமிடுவதன் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் உரிய சவால்கள் மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது விசேடமாக வலியுறுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம் கிடைக்கும் நடைமுறை அனுபவங்கள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவசியமான திருத்தங்களையும் மேம்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஆரம்பக் கட்டத்தில் இனங்காணப்பட்ட குறைபாடுகளுடைய கற்கும் மாணவர்களின் குறிப்பிட்ட தேவைகளில் மட்டும் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை முறையாக நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இந்தத் திட்டம் இணைக்கப்படுவதுடன், அதன் ஆரம்பக் கட்டத்தில் 1, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
இதன்போது, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக ஏற்கனவே அடிப்படை வசதிகள் உள்ள பாடசாலைகள் அல்லது கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அபிவிருத்திக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படும்.
இது தவிர, முறையான அடையாள மற்றும் பரிசோதனை முறைகளை நிறுவுதல், கல்வியலாளர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்குதல் மற்றும் அணுபவ வசதிகள் தொடர்பான தரங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
