Our Feeds


Friday, August 21, 2026

Zameera

வாகனத் திருட்டுகள் : வாகனங்களை அலட்சியமாக நிறுத்த வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை


 மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகங்கள் அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை குற்றவாளிகளால் திருடப்படுவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் இதனைக் குறிப்பிட்டார். 


அத்தகைய வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களுக்குள் விடப்படும் விலைமதிப்பற்ற ஆவணங்கள் மற்றும் பொருட்கள் என்பவை காணாமல் போவது தொடர்பிலும் தற்போது பதிவாகியுள்ளதாகத் அவர் மேலும் தெரிவித்தார். 


சில சந்தர்ப்பங்களில், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே வேறு வேலைகளில் ஈடுபடுவதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் சாவிகளை அவற்றிலேயே விட்டுச் செல்வதன் மூலம் குற்றவாளிகள் உடனடியாக அவற்றைத் திருடிச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


அத்துடன், தங்களது வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியை வீட்டின் திறந்த வெளியில் நிறுத்தி வைப்பதும், வீட்டின் வாயில் கதவுகளுக்கு பூட்டுப் போடாமல் இருப்பதன் மூலமும் மோட்டார் சைக்கிள்கள் அல்லது வாகனங்கள் திருடப்படுவது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டால், அந்த இடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடமும், வர்த்தக நிலைய வளாகத்தில் வாகனம் நிறுத்தப்பட்டால் அது தொடர்பான பாதுகாப்பு உத்தியோகத்தர் அல்லது வர்த்தக நிலையத்தின் கடமையில் உள்ள ஊழியரிடம் அது குறித்துத் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். 


அத்துடன், இரவில் இருண்ட பகுதியிலோ அல்லது தனிமையான இடத்திலோ மோட்டார் சைக்கிள் அல்லது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால், அது குற்றவாளி ஒருவருக்குக் குற்றம் இழைப்பதற்கு உதவி புரிவதாக அமையும் என்பதால், அது குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். 


எவ்வாறாயினும், தங்களது வாகனம் திருடப்பட்டால், பொலிஸ் அவசர அழைப்பு இலக்கங்களான 119 / 118 அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும், அருகில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடியாக அறிவிக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »