நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழையால், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு பாரியளவில் மண்மேடு சரிந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில், சரிந்த மண்மேடு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வீதியில் போக்குவரத்து தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், குயில்வத்தை பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மலையகப் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு, மண்மேடு சரிவு மற்றும் நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதனால், பாதிக்கப்பட்ட வீதிகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை, அந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(செ.திவாகரன்)
