மலேசியாவில் தங்கியுள்ளதாக கூறப்படும்
இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுத் தலைவர் "கஞ்சிபானை இம்ரான்" என்பவரைக் கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தோல்வியடைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.வெளிநாட்டு சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல வெளிநாடுகளில் நடத்தப்படும் காவல்துறை நடவடிக்கைகள் அந்தந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக் காவல்துறை அதிகாரிகளால் உள்நாட்டில் செயற்படுவதைப் போன்று வெளிநாட்டில் செயற்பட முடியாது என்றும், வெளிநாடுகளின் புவியியல் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறியாத சூழலில் அங்குச் செயற்படுவது சவாலானது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
எனவே, மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையைத் தோல்வியாகக் கருத முடியாது என்றும், வெளிநாட்டுச் சட்ட மற்றும் செயற்பாட்டு நடைமுறைகளைக் கையாள இது இலங்கை அதிகாரிகளுக்குக் கிடைத்த ஒரு கற்றல் அனுபவமாகவே கருத வேண்டும் என்றும் ஒலுகல சுட்டிக்காட்டியுள்ளார்.
