Our Feeds


Monday, August 31, 2026

Zameera

ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். 


தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார். 


இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை. 


இதன்காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தது. 


எனினும், அந்தச் சமயத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார். 


இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »