பங்களாதேஷின் புதிய ஜனாதிபதியாக பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவர் மிர்சா பக்ரூல் ஆலம்கீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஷின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் வேட்பாளராக 78 வயதான மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் முன்னிறுத்தப்பட்டார்.
இந்நிலையில், பங்களாதேஷில் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று (20) வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர்.
மொத்தம் 343 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் 255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட 11 எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான ஒலி அகமது 88 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
இதன்படி, பங்களாதேஷின் 23ஆவது ஜனாதிபதியாக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் நாளை (21) மாலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
