அதிகாரம் கைவசம் இருக்கும் போது அதனால் தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த பின்னரே தமது தவறுகள் குறித்து சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தாங்கள் தவறு செய்தால், அதனைத் தவறு என ஏற்றுக்கொண்டு உணரக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்கள் எனக் குறிப்பிட்ட ரோகித்த அபேகுணவர்தன, ஆளும் தரப்பில் உள்ள பிரதி அமைச்சர் ஒருவர் தமது கருத்தை கவனமாகக் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
“அதிகாரம் கைவசம் இருக்கும் போது தலைக்கனம் அதிகரிக்கிறது. அதிகாரம் கையை விட்டுச் செல்லும்போதுதான், ‘நமக்கு என்ன நடந்தது?’ எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. அதிகாரம் இருக்கும் இடத்தில் புத்தி இருப்பதில்லை, புத்தி வரும் போது கையில் அதிகாரம் இருப்பதில்லை” என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஆட்சியில் இருப்பவர்களிடம் உண்மையைச் சொன்னால், சாரைப்பாம்பு மீது மண்ணெண்ணெய் ஊற்றியது போல துடிக்கின்றார்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தற்போது ஆளும் தரப்பினரிடம் அதிகாரம் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அதிகாரமும் நாடாளுமன்ற ஆசனங்களும் இல்லாத நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்து மக்களுடன் பயணித்த அனுபவம் தங்களுக்கு இருப்பதாகவும் ரோகித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் காணப்படும் வரிச்சுமை தொடர்பிலும் அவர் அரசாங்கத்தை விமர்சித்தார்.
உண்மையைச் சுட்டிக்காட்டும்போது அரசாங்கத் தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக எதிர்வினையாற்றுவதாகக் குறிப்பிட்ட அவர், சாதாரண மக்களும் அதிகரித்துள்ள வரிச்சுமையால் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண விருந்துக்காக விடுதிக்குச் சென்று உணவருந்தும்போது, அந்த உணவிற்கும் 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வியாபாரிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் செலுத்திய வரியை மீளப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்பட்டாலும், சாதாரண நுகர்வோருக்கு அவ்வாறான வாய்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், வரிச்சுமையின் தாக்கம் நேரடியாக சாதாரண மக்களையே பாதிப்பதாகத் தெரிவித்த ரோகித்த அபேகுணவர்தன, நகைச்சுவை கலந்த விமர்சனத் தொனியில், திருமண விருந்துக்குச் சென்றுவிட்டு பின்னர் விவாகரத்து செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
