நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின்
போது, சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் எனச் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கேள்வி எழுப்பியுள்ளது.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பான அண்மையில் வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னர் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான சேனக பெரேரா வெள்ளிக்கிழமை (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அங்கு உயிரிழந்த கைதிகளைக் கொலை செய்தது யார் என்பது தொடர்பான உண்மையான சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில், உயிரிழந்த கைதிகளில் பெரும்பாலானோர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாகவே மரணமடைந்துள்ளனர்.
எனவே, இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார்? அல்லது கைதிகளே தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டார்களா? அப்படியில்லை எனில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை? போன்ற கேள்விகளை நாங்கள் கௌரவ நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம்.
அத்துடன், சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? அவர்கள் நாட்டின் குற்றவியல் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் இல்லையா? என்பதையும் நாங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தோம்.
தற்போது இடம்பெற்றுவரும் இந்த விசாரணைகளில் எந்தவொரு நடுநிலைமையையும் எங்களால் காண முடியவில்லை. கைதிகளைப் படுகொலை செய்த நபர்களுக்கு எதிராகவும் சட்டம் சரியான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே நீதிமன்றில் நமது பிரதான கோரிக்கையாக இருந்தது.
இன்றைய தினம் உயிரிழந்த கைதிகளின் பெருந்திரளான உறவினர்கள் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். அவர்களின் நியாயமான அங்கலாய்ப்புகளையும் கோரிக்கைகளையும் நாங்கள் கௌரவ நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்துள்ளோம்.
