Our Feeds


Thursday, September 3, 2026

Zameera

22ஆவது திருத்தம் மூலம் : மக்களை ஏமாற்ற முயற்சி – சாமர சம்பத்


 (செ.கவிஷனா)



நாட்டில் தற்போது உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான போராட்டமே இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தங்களை முன்வைத்து மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமை குறித்து நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் அச்சமின்றி வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.


ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில்  நேற்று புதன்கிழமை (02) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 75 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான போராட்டமே இன்று நாட்டில் நடைபெற்று வருகிறது, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து மீண்டும் ஒருமுறை மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது. 


உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குச் சாதகமாகச் சட்டங்கள் அமைக்கப்பட்டு, அவர்களின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, ஆனால் இலங்கையிலுள்ள சாதாரண, மக்களுக்கு மட்டுமே சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. 



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவின் விவகாரத்தில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கும்போதே அவர் பலமுறை வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளாரே தவிர, சாதாரண மக்களுக்கு வழங்கப்படாத கட்டுப்பாடுகள் அரசியல் பழிவாங்கல்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.


நாட்டின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இந்த அரசாங்கம் இயங்க நினைப்பது சாத்தியமற்றது, பிரேமதாச மற்றும் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைப் போல இந்த அரசாங்கமும் விரைவில் வீழும்.


நீதிமன்ற வழக்குகளின் பெயரால் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைக் தள்ளிவைத்து அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. 1991ஆம் ஆண்டு பிரேமதாசவின் காலத்தில், அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது துணிச்சலுடன் செயல்பட்ட மூத்த தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.


துப்பாக்கிச் சூடுகள் மற்றும் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், விஜயதாச ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் பாராளுமன்றத்திற்குத் தீர்மானத்தைக் கொண்டுவரத் துணிந்த வரலாற்றையும் நினைவில் கொள்ள வேண்டும். 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 75 வயதாகிறது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, சஜித் பிரேமதாசவின் கட்சி என அனைத்துக் கட்சிகளின் தலைமைகளிலும் வயது முதிர்ந்த தலைவர்களே வீற்றிருக்கின்றனர்.



இருப்பினும், சுதந்திரக் கட்சி மட்டுமே மூத்த அனுபவமிக்கத் தலைவர்களையும் இளம் தலைமுறையினரையும் இணைத்து இயங்கும் வலுவான வரலாற்றைக் கொண்டுள்ளது.


ஜே.வி.பி அமைப்பைத் நாட்டின் பிரதான எதிரியாக கொண்ட தலைவர்கள், முன்னொரு காலத்தில் தங்களுக்கு உதவியாக இருந்தவர்கள். இன்று மக்களுக்கு நெருக்கடிகளைத் தரும் சக்திகளாக மாறியுள்ளனர்.


மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணாமல், ஊடக விவாதங்களில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றர். 


நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், தற்போதைய மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தவும் மக்கள் எவ்வித அச்சமுமின்றி வீதிகளில் இறங்கிப் போராட முன்வர வேண்டும்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு அரசியல் கூட்டணிக்கும், சவால்களுக்கும் எப்போதும் தயாராகவே உள்ளது என்றும், மக்களைப் பாதுகாக்கும் அரணாகத் தொடர்ந்து இயங்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உறுதியளித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »