80 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் ஜம்இய்யா
📍📍📍📍📍📍📍📍📍📍📍📍
எகிப்தின் தாருல் இஃப்தா மற்றும் உலகளாவிய ஃபத்வா நிறுவனங்களின் பொதுச் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 11ஆவது சர்வதேச மாநாடு, சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த முஃப்திகள், இஸ்லாமிய அறிஞர்கள், அமைச்சர்கள் மற்றும் சமயத் தலைவர்களின் பங்கேற்புடன், 2026 செப்டம்பர் 02ஆம் திகதி எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமானது.
🔴 உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் குடும்பச் சவால்கள்:
‘உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் குடும்பச் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில், டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு, தனிமனிதவாதம், குடும்ப ஒற்றுமை, குழந்தை வளர்ப்பு மற்றும் இஸ்லாமிய அடையாளத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சமகால முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பான சவால்கள் விரிவாக ஆராயப்பட்டன.
🔴 80 நாடுகளின் மத்தியில் இலங்கையின் பிரதிநிதித்துவம்:
இம்முக்கிய சர்வதேச மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் கௌரவத் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்விஐயம், உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வரும் பங்கேற்றனர்.
சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள், ஃபத்வா நிறுவனங்களின் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாடு, உலகளாவிய ரீதியில் குடும்பம் எதிர்கொள்ளும் சமகால சவால்கள் குறித்து கருத்துப் பரிமாற்றத்திற்கான முக்கிய சர்வதேச அரங்காக அமைந்தது.
🔴 எகிப்தின் தலைமை முஃப்தியுடன் முக்கிய சந்திப்பு:
மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 01ஆம் திகதி எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜம்இய்யாவின் பிரதிநிதிகள், எகிப்தின் தலைமை முஃப்தி கலாநிதி நஸீர் முஹம்மத் அய்யாதை சந்தித்து பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது, ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட முக்கிய வெளியீடுகள், குறிப்பாக மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளையும் வழிகாட்டல்களையும் உள்ளடக்கிய ‘மன்ஹஜ்’ கையேடு, எகிப்தின் தலைமை முஃப்தியிடம் கையளிக்கப்பட்டது.
🔴 எகிப்தின் மத விவகாரங்கள் மற்றும் வக்ஃப் அமைச்சருடன் சந்திப்பு:
தொடர்ந்து, ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் ஆகியோர் எகிப்தின் மத விவகாரங்கள் மற்றும் வக்ஃப் துறை அமைச்சர் கலாநிதி உஸாமா அல்-அஸ்ஹரியையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின்போது இலங்கையின் சமகால மார்க்க மற்றும் சமூக நிலைமைகள், இலங்கை முஸ்லிம் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதில் சமய நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
🔴 சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கில் முஃப்தி ரிஸ்வி அவர்களின் ஆய்வுரை:
மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்குகளில், டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் குடும்பச் சவால்களின் பின்னணியில் ஃபத்வா நிறுவனங்கள், உளவியல் வழிகாட்டல் நிறுவனங்கள் மற்றும் தனியார் சட்ட நீதிமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பில் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி ஆய்வுரைகளை நிகழ்த்தினார்.
எகிப்து ஃபத்வா மையத்தின் செயலாளர் ஷெய்க் ஹாஸிம் தாவூத் முன்னிலையில் இவ்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இவ்வாய்வரங்குகளில் எகிப்தில் கற்கும் இலங்கையை சேர்ந்த இளமானி, முதுமானி மற்றும் கலாநிதி கற்கைகளைகளை தொடரும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
🔴 அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் குடும்ப ஆலோசனை:
தமது உரையில் முஃப்தி ரிஸ்வி அவர்கள் பின்வரும் முக்கிய விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.
1. அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் குடும்ப ஆலோசனையின் முக்கியத்துவம்.
2. சமகால குடும்பங்கள் எதிர்நோக்கும் உளவியல் மற்றும் சமூக ரீதியிலான சவால்கள்.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே உரிய முறையில் அணுகுவதன் அவசியத்தையும், குடும்ப உறுப்பினர்களிடையே புரிந்துணர்வு, பொறுமை, பரஸ்பர மரியாதை மற்றும் பொறுப்புணர்வை வளர்ப்பதில் மார்க்க வழிகாட்டலின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
🔴 குடும்ப நலனுக்காக ஒருங்கிணைந்த செயற்பாடு:
இலங்கையில் குடும்ப நலனையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்காக மார்க்க அறிஞர்கள், ஃபத்வா நிறுவனங்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய சமூக நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் முஃப்தி ரிஸ்வி அவர்கள் தமது உரையில் வலியுறுத்தினார்.
🔴 சர்வதேச அரங்கில் இலங்கையின் குரல்:
பல நாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள், ஃபத்வா நிறுவனங்களின் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பங்கேற்ற இவ்வாய்வுக் கருத்தரங்குகளில், இலங்கையின் சமகால மார்க்க, குடும்ப மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி முன்வைத்த கருத்துகளும் அனுபவப் பகிர்வுகளும் முக்கியத்துவம் பெற்றன.
80 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்முக்கிய சர்வதேச மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதித்துவமும், முஃப்தி ரிஸ்வி அவர்களின் ஆய்வுரையும், சர்வதேச மட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைமைகள் மற்றும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைப்பதற்கான முக்கியமான வாய்ப்பாக அமைந்தது.
