விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், இக்ககுற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே சுமத்தப்பட்டுள்ளவை என்றும் தமது கட்சி நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெறக்கூடிய ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்காகவே இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிக அதிகாரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, அரசியலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு அல்ல என அந்த கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டிலுள்ள சுயாதீன அரச நிறுவனங்கள் அரசியல் அச்சுறுத்தல்களுக்கான கருவிகளாகப் பயன்படுத்த முற்பட்டால், நாட்டையும் நாட்டின் ஜனநாயகத்தையும் மதிக்கும் அனைத்துப் பிரஜைகளும் அது குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களை ஒன்றிணைத்து எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் மக்கள் பேரணியொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த பின்னணியில், பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை கேள்விக் குறியாக உள்ளதாகவும் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதிலும், எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த மக்கள் பேரணி அவர் எதிர்பார்த்தபடியே நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
