Our Feeds


Saturday, September 5, 2026

Zameera

2027 இறுதிக்குள் IMF திட்டத்திலிருந்து இலங்கை விலகும்

 

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திலிருந்து விலகவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். 


அரசு ஊழியர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கில், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அரசு அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்ததாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார். 


இதற்கமைய, ஆரம்ப வரவுசெலவுத் திட்டங்கள் மூலம் பல கட்டங்களாக சம்பளம் உயர்த்தப்பட்டதுடன், வரவிருக்கும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டம் மூலமும் சுமார் பத்தாயிரம் ரூபாவினால் சம்பளம் உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டார். 


முன்னர் 17,000 ரூபாவாக இருந்த அரசு சேவையின் குறைந்தபட்ச சம்பளம், அடுத்த ஆண்டாகும்போது 40,000 ரூபாவைத் தாண்டும் வகையில் கணிசமான அளவில் உயரும் என்றும் அவர் கூறினார். 


அரசு ஊழியர்கள் சம்பளம் குறித்த அழுத்தமின்றி கடமையையாற்றுவது திறமையான சேவைக்கு அவசியமான ஒன்றாகும் எனவும், தற்போதைய பொருளாதாரத்தால் தாங்கக்கூடிய அதிகபட்ச அளவில் இந்த சம்பளத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார். 


தொடர்ந்து உரையாற்றிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத்: 


"தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்ததும் முதன்முதலில் செய்தது அரசு சம்பளம் பெறும் அனைவரினதும் சம்பளத்தை உயர்த்தியமையாகும். முதலாவது வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் பத்தாயிரம் ரூபா உயர்த்தப்படுகிறது. இரண்டாவது வரவுசெலவுத் திட்டத்திலும் அதே அளவு உயர்த்தப்படுகிறது. மூன்றாவது வரவுசெலவுத் திட்டம் நவம்பர் மாதம் வருகிறது. நவம்பர் மாதம் அதே அளவால் உயர்த்தப்படும். அப்போது இதற்கு முன் சுமார் பதினேழாயிரம் ரூபாவாக இருந்த குறைந்தபட்ச சம்பளம், அடுத்த ஆண்டாகும்போது நாற்பதாயிரம் ரூபாவைத் தாண்டும் ஒரு சம்பள உயர்வாகும். அது சும்மா பேச்சளவிலான உயர்வு அல்ல. அரசு சேவையின் திறனை அதிகரிப்பதற்காகவே நாங்கள் அதைச் செய்தோம்... 


நீங்கள் அழுத்தத்துடன் தொழில் செய்தால், குறிப்பாக சம்பளம் குறித்த அழுத்தத்திற்கு உள்ளானால், அதற்கு நாங்கள் உண்மையாகவே தீர்வை வழங்க வேண்டும். இல்லையெனில் உங்களது கடமை சரியாக நடக்காது. எனவே, இது ஒரு மிகப்பெரிய சம்பள உயர்வு என்றும், இதைவிட சம்பளத்தை உயர்த்த முடிந்தால் இன்னும் நல்லது என்றும் நாங்கள் நினைக்கிறோம். ஆனால் நமது நாட்டின் பொருளாதாரத்தால் தாங்கக்கூடிய அளவே இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, குறிப்பாக 2027 முடிந்து நமது நாடு IMF இல் இருந்து விலகி, இதைவிட அதிக நிவாரணங்களை வழங்க அரசு எதிர்பார்க்கிறது." என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »