மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 9,000 குடும்பங்களுக்கு தற்போது பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. அதேவேளை அத்தியாவசிய தேவையான நீரை வழங்குவதற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளுமாறு வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க அதிகாரிக்கு பணிப்புரை வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பேரில், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது.
இதன் போது மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி தொடர்பான நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை காரணமாக மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளைத் துரிதப்படுத்து வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 9,000 குடும்பங்களுக்கு தற்போது பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது இருந்தபோதும் மக்களின் அத்தியாவசிய தேவையான நீரை வழங்குவதற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு இதன் போது அதிகாரிக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
அதேவேளை மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள், நீர்வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய நெருக்கடிக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதுடன், எதிர்காலத்திற்கான நிலையான நீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் , பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யூ.கே.எம். அப்துல்லாஹ், பொறியியலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர், துறைசார் நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
