Our Feeds


Thursday, September 10, 2026

SHAHNI RAMEES

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற புதிய கட்டுப்பாடு!

 


வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கையில்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு இனிமேல் குறைந்தது மூன்று மாதங்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற விமானப்படை வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது,


மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்த நாளிலிருந்து மூன்று மாதங்கள் நிறைவடையும் வரை நடைமுறை சாரதி பரீட்சைக்கு அனுமதி வழங்கப்படாது.



எனவே, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக எழுத்துப் பரீட்சையில் தோற்றி, மூன்று மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னர் மீண்டும் வெளிநாடு செல்லும் ஒருவர், ஒன்றரை வருடத்துக்குள் மீண்டும் நாட்டுக்கு வந்து நடைமுறைப் பரீட்சையில் தோற்றி சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்த நாளிலிருந்து வழங்கப்படும் பயிலுநர் அனுமதிப்பத்திரம் ஒன்றரை வருட காலத்துக்கு செல்லுபடியாகும்.


சாரதி பயிற்சிக்காகவே மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து சாரதிகளும் போதிய பயிற்சியையும் திறனையும் பெற்ற பின்னரே சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »