Our Feeds


Wednesday, September 2, 2026

Zameera

கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியில் பல முறைகேடுகள் - சஜித் பிரேமதாச


 கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பல குறைபாடுகளும் முறைகேடுகளும் நிகழ்ந்து காணப்படுகின்றன என அங்கு பணியாற்றும் பொறியியலாளர்களும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் 2022 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அது 2025 ஜனவரி 3 ஆம் திகதிக்குள் நிறைவடையவிருந்தது. எனினும், இப்போதிருந்து மேலும் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இப்பணிகளை நிறைவு செய்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 


கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் நிர்மாணப்பணிகள் தொடர்பில் அதன் பொறியியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 


இந்தச் சம்பவம் குறித்து வெளியாகும் தகவல்களின் பிரகாரம், தற்போது இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து பாரதூரமான கேள்விகளும் பிரச்சினைகளும் எழுந்துள்ளன. திட்ட முகாமைத்துவம் பிரிவும் ஆலோசனைக் குழுவும் இரு வேறு தனித்தனி வழிகளில் செயற்பட வேண்டும். ஆனால் இந்தப் பொறியியலாளர்கள் இவ்விரு பிரிவுகளுக்கும் சேவையாற்றும் நபர்களாக மாறியுள்ளதால், நடுநிலைப் பேணலில் சிக்கல்கள் எழுந்துள்ளன. தாங்கள் எடுக்கும் முடிவுகள் சரியா தவறா என்பதைத் தாங்களே தீர்மானிக்கும் நிலை இங்கு ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


நடைபெறும் அபிவிருத்தி செயற்பாடுகள் சுயாதீனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். என்றாலும், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. Conflict of Interest க்குள் இந்தச் செயற்பாடு இடம்பெறுகிறது. இதனால் வேலைத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து பாரதூரமான பல சந்தேகங்கள் எழுந்துள்ளமையால், துறைமுக அமைச்சர் இது குறித்துக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இத்திட்டத்திற்கு இன்னும் நிரந்தரப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. 2025 ஜனவரி 3 ஆம் திகதியன்று நிறைவடையவிருந்த இத்திட்டத்தை நீண்ட காலம் நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், இதுவரை 3 முறை காலநீடிப்பும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எந்தவொரு காலநீடிப்புக்கும் அமைச்சரவை அனுமதிகூடப் பெறப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வெளிப்படுத்தினார். 


சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுதல், அறவிடப்பட வேண்டிய கட்டணங்களை நீக்குதல், தொடர்ந்து ஆரம்பக் கட்டப் பணிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் தொடர்ச்சியான நஷ்டத்தை ஏற்படுத்துதல் போன்ற செயல்கள் சந்தேகத்திற்குரியவைகளாக அமைந்து காணப்படுகின்றன. தற்சமயம் காலநீடிப்பின் 3 ஆவது கட்டம் 2026 ஜூலை 7ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதுடன், 4 ஆவது கட்டம் துறைமுக அதிகாரசபையின் அனுமதியின்றி நீடிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுவது பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றன. தற்போதைய கொடுப்பனவுகள் கூட சட்டவிரோதமானவையாக காணப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 


அத்துடன், இத்திட்டத்திற்குத் தேவையான மனிதவளம் போட்டித் தன்மையான முறையின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டதுடன், அதற்காக 2019 ஆம் ஆண்டின் முகாமைத்துவ சேவைகள் சுற்றுநிரூபம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இவர்களின் சம்பளத்தில் எந்தவொரு புதுப்பித்தலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »