
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் - சஜித்!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு, நாட்டின் ஜனநாயகம் சீரழிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
கட்சித் தலைமையகங்களின் விருப்பத்திற்கேற்ப, இளைஞர் மற்றும் சிவில் சமூகக் குழுக்களை நியமிப்பதன் மூலம், நீதித்துறையிலும் செல்வாக்கு செலுத்தப்படும் ஒரு சகாப்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இது நீதி வழங்கும் செயன்முறையையே தடுக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அபிவிருத்தியின் போதும் அனர்த்தங்களின் போதும் அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆற்றும் சேவை, உயர்வாக மதிக்கப்பட வேண்டுமென்றும், சர்வதேச தரங்களுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தாமல் பலவந்தமாக அவற்றைக் கட்டுப்படுத்த முற்படக் கூடாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்டமைப்பு மாற்றமொன்றை வழங்குவதாக வாக்களித்து ஆட்சியமைத்த தற்போதைய அரசாங்கம், இன்று விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் மீது கடுமையான அரச அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்த அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கும் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமென்றும்,வலியுறுத்திய அவர் ஜனநாயகம் மற்றும் சிவில் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.











