சட்ட மா அதிபர் தப்புல டீ லிவேரா மற்றும்
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இணைப்புச் செயலாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன
ஆகியோர் நீதிமன்றை அவமதித்துள்ளதாக பிரதம நீதியரசர் மற்றும் மேன்முறையீட்டு
நீதிமன்ற தலைவர் ஆகியோருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இல. 104. 158 சேனாநாயக்க
வீதி, நாவல என்ற முகவரியைச் சேர்ந்த பீ.டி,வீ சேனபால என்ற நபரால் இந்த முறைப்பாட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகக்
குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ
மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர
ஆகியோருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும்
வழக்கின் பிரதிவாதிகளான இருவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம
நீதிவான் லங்கா ஜயரத்னவினால் வழங்கப்பட்ட உத்தரவு தவறானது எனவும், அடிப்படையற்ற பக்கச்சார்பானது எனவும் சட்ட மா அதிபர்
திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை இந்த முறைப்பாட்டுக்கான காரணமாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 9 ஆம்
திகதி மேற்படி பிரதிவாதிகள் இருவரையும் நீதிவான் பிணையில் விடுவித்தார்.
இந்த பிணை உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி சட்ட மா அதிபரால் கொழும்பு மேல்
நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்று முன்வைக்கப்பட்டது.
இத்தகைய மீளாய்வு மனுவொன்று மேல்நீதிமன்றத்துக்கு
அனுப்பப்படுவதாக சட்ட மா அதிபரின் இணைப்புச் செயலாளர் நிஷாரா ஜயரத்னவினால்
ஊடக அறிவித்தலொன்று விடுக்கப்பட்டிருந்தது. பிணை வழங்கப்பட்டமை பக்கச்சார்பான
விடயம் எனவும், புறக் காரணிகளின் அழுத்தங்களால் நீதிவான்
இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடந்த ஜூலை 18 ஆம்
திகதி வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில் பகிரங்கமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கமைய, கடந்த
ஜூலை 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையொன்றில், உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்படும்
மனித உரிமை மனு உள்ளிட்ட வழக்குகள் மீதமாக உள்ளதால் தமது கட்சிக்காரர்கள்
கடுமையாக பாதிக்கப்படுவதாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி முந்தைய ஊடக
அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, சட்ட மா
அதிபருக்கு தெரிந்தே அவரது உத்தரவுடனேயே இந்த ஊடக அறிக்கை அனுப்பப்பட்டதாக
சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். எனினும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அவர் மறுத்திருக்கவில்லை.
எனினும், கொழும்பு
பிரதம நீதிவானின் உத்தரவு நேரடியாகவோ, மறைமுகமாகவோ
சட்ட மா அதிபரால் பகிரங்கமாக விமர்சித்தமை மற்றும் பிரதம நீதிவானுக்கு
எதிராக தனிப்பட்ட கருத்துகளை தெரிவித்ததன் ஊடாக நீதிமன்றத்துக்கு அவமதிப்பு
ஏற்பட்டுள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரின் நடவடிக்கைக்கு
எதிர்ப்பு தெரிவித்து, குறித்த
முறைப்பாட்டில் நீதிவானின் உத்தரவு தொடர்பில் சட்ட மா அதிபரின் கருத்து, “சட்டவிரோத”, “நியாயமற்ற”, “எதேச்சாதிகாரமான உத்தரவு” ஆகிய சொற்பிரயோகங்களால் நீதிவானுக்கு கடுமையான அவமதிப்பு
ஏற்பட்டுள்ள அதேவேளை, நிந்திப்பதற்கான
வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சுயாதீன
அதிகாரம் கொண்டுள்ள நீதிமன்றம் தொடர்பில் பொதுமக்களின் மனதில் கட்டியெழுப்பப்பட்டிருந்த
நம்பிக்கையை சிதைப்பதற்கு சட்ட மா அதிபரின் ஊடக அறிவித்தல் காரணமாகியுள்ளதாக
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நீதிமன்றை
அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, குறித்த தரப்பினர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்
நீதிபதி யசந்த கோதாகொடவிடமும் கோரப்பட்டுள்ளது.
