எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலகுவில் வெற்றிகொள்ள கூடியவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் பெரும்பாலான கட்சிகளின் ஆதரவை பெற்றவருமான சஜித் பிரேமதாஸவை இவ்வாரத்துக்குள் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார் என்றும் சஜித்தை களமிறக்குவதற்கு பிரதமர் மறைமுகமான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அவ்வாறு எந்தவொரு பிளவும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கிடையாது. கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது.
அதையே அவர்கள் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதை கட்சியின் பிளவு என அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. எவ்வாறு இருப்பினும் கட்சியின் இறுதித் தீர்மானத்திற்கு உடன்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள்.
