இந்த நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை நாம் தெரிவு செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
நுகேகொடயில் இன்று (14) இடம்பெற்ற அவ்வமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
யாருடையவாவது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, பரம்பரை ரீதியாக ஆட்சிக்கு வருவதற்கோ ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்ய பொதுபல சேனா வாக்களிக்க மாட்டாது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டுமே அல்லாமல், யாரிடமும் சோரம் போய் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் நிலைமையை மாற்ற வேண்டும். நாம் தேசிய வேலைத்திட்டத்தை வகுத்துள்ளோம். எமக்கு ஒரு இலக்கு இருக்கின்றது.
நாம் மிகவும் சிறந்த வேட்பாளரைத் தெரிவு செய்து அவரிடம் கட்சியையும், சின்னத்தையும் விட்டுவிட்டு வாருங்கள் என்று கூறவுள்ளோம். நாம் உங்களை உயர்த்திப் பிடிப்போம் என்பதையும் அவரிடம் கூறவுள்ளோம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார். (DC)
