அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் பிரதமராக அறிவிப்பதற்கு நேற்றிரவு விசேட ஆலோசனையொன்று நடாத்தப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்தே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (30) திடீரென ஊடகவியலாளர்களைக் கூட்டி தானே பிரதமர் என அறிவித்ததாகவும் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
தற்பொழுது அரச தொலைக்காட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அடுத்த பிரதமர் யார் என்பதை சஜித் பிரேமதாச இதுவரையில் எந்தவொரு இடத்திலும் அறிவிக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் பிரதமர் யார் என தெரியாது அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் தலைவருக்கு முஸ்லிம்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்.
எந்தவித கோரிக்கையும், வேண்டுகோள்களும், நிபந்தனைகளும் இன்றி முஸ்லிம் தலைமைகள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க எடுத்த முடிவு தவறானது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு கண்ணை மூடிக் கொண்டு ஆதரவை வழங்கினர்.
இந்த நாட்டு வரலாற்றில் முஸ்லிம்கள் அதிக பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த ஒர் அரசாங்கமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் காணப்படுகின்றது. இந்த அரசாங்கத்துடன் தான் பாராளுமன்றத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தனர். அப்படி இருந்தும் அதிக பிரச்சினைகளை இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் சந்தித்தனர். கிந்தொட்டை தொடக்கம் மினுவாங்கொடை வரையில் 340 வன்முறைச் சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி வேட்பாளராக இருந்து, எமது முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளை முன்வைக்க நான் தீர்மானித்தேன் எனவும் அவர் மேலும் கூறினார். (மு)
