எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி
தனித்து போட்டியிடவும் இப்போது ஆதரவை வழங்கும் இதர கட்சிகள் தனித்துப் போட்டியிட
வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள
நிபந்தனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப்
போட்டியிடுவதென்றும் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அரசொன்றை அமைப்பது பற்றி
யோசிக்கலாமெனவும் ரணில் தீர்மானித்துள்ளார்.
ரணிலின் இந்த யோசனை குறித்து ரணிலுக்கு நெருக்கமான எம் பி
ஒருவர் நேற்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்சித் தலைவர் ஒருவரை சந்தித்து
கூறியுள்ளார்.
ஆனால் ரணிலின் அந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்ட
அந்த தமிழ்க்கட்சித் தலைவர் ,கடந்த
ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை கணிசமாக பெற்ற ஐ தே க இம்முறை
அதனை சாதகமாக பயன்படுத்தி சிறுபான்மை இன கட்சிகளை தனித்து தேர்தலில் நிற்குமாறு
கேட்பது அநீதியென்றும் இது ரணிலின் இறுதித் தீர்மானம் என்றால் பங்காளிக் கட்சிகள்
அனைத்தும் இணைந்து தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டி வருமெனவும் எச்சரித்துள்ளார்.
இந்த பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிகளாக
இருக்கும் அரசியல் கட்சிகள் சஜித்தை முன்னிறுத்தி புதிய அரசியல் முன்னணியொன்றை
ஆரம்பிப்பது குறித்து பேச்சு நடத்தி வருகின்றன.
