Our Feeds


Wednesday, May 27, 2020

www.shortnews.lk

பாடசாலைகளை மீண்டும் திறப்பது பற்றி ஓரிரு வாரங்களில் தீர்மானம் எடுக்கப்படும் - கல்வி அமைச்சர்

 


கொவிட் - 19 வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை திறக்கும் திகதியை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் அறிவிக்க முடியும் என கல்வி அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

கொவிட் தொற்று காரணமாக 66 நாட்கள் முடக்கப்பட்டிருந்த நாடு தற்போது வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், மக்களின் நடவடிக்கைகள், போக்குவரத்து துறை தொடர்பிலான விடயங்கள் ஆகியவற்றை மிகவும் கவனமாக அவதானித்து, அதன் பின்னரே கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார பிரிவினருக்கும் இடையில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இலங்கையிலுள்ள சுமார் 43 லட்சம் மாணவர்கள் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவதாகவும், போக்குவரத்து வசதிகள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கலந்துரையாடலின் பின்னரே தீர்மானமொன்று எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பாடசாலைகளுக்குள் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு செயற்படுவது என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »