தெருக்களில் கிருமிநாசினிகள் தெளிப்பது கொரோனா வைரஸை கொல்லாது, மேலும் இது ஆரோக்கியத்திற்கு கேடானது என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் பொது வெளியில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. சில இடங்களில் கட்டிடங்களையே கிருமிநாசினிகளால் குளிப்பாட்டுகிறார்கள். பொது இடங்களில் கிருமிநாசினி மேலே தெளிக்கும் வகையில் கிருமிநாசினி தெளிக்கும் கூடங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
வைரஸை அழிப்பதற்காக தெருக்கள் மற்றும் சந்தைப் பகுதிகள் போன்ற வெளிப்புற இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது மற்றும் சுத்தப்படுத்துவது பயனற்றது. இது கொரோனா வைரஸையோ அல்லது வேறெந்த கிருமிகளையோ கொல்லாது. ஏனெனில் கிருமிநாசினி அழுக்கு மற்றும் குப்பைகளால் செயலிழந்துவிடும். கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தும் இடங்களாக தெருக்களும் நடைபாதைகளும் கருதப்படவில்லை எனவே கிருமிநாசினிகளை வெளியே தெளிப்பது மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
தனிநபர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதை எந்த சூழ்நிலையிலும் பரிந்துரைக்கவில்லை.இது, உடல்ரீதியிலும் மன ரீதியிலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. கொரோனா பாதித்த நபர் மற்றவர்களுக்கு கொரோனா பரவலை இது தடுக்காது. மக்கள் மீது குளோரின் அல்லது நச்சு கலந்த வேதியியல் மருந்தை தெளிப்பது என்பது கண் பாதிப்பு மற்றும் தோல் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
கட்டடத்தின் உட்புறங்களில் தரையில் மருந்து தெளிக்கக்கூடாது. இவ்வாறு செய்வது மருந்து படாத இடங்களில் எந்த பயனையும் அளிக்காது. கிருமிநாசினி மருந்தில் நனைக்கப்பட்ட துணியை மூலம் துடைப்பதன் மூலமே, கிருமிகளை அளிக்க முடியும். – இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
